Monday 22 April 2013

களம்
கேப்டன் செய்தி தொலைக்காட்சியில் சொல் புதிது நிகழ்சியில் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பான நேர்காணல்...
நாளை (23.4.2013)காலை 11 மணிக்கு மறு ஒளிபரப்பு...

http://www.youtube.com/watch?v=vKmf4ZvsZuw 

Sunday 31 March 2013

மரியாதைக்குரிய முன்னாள் மத்திய அமைச்சர் தாயாநிதி மாறன் அவர்களுக்கு,




வணக்கம் மாநில சுயாட்சி என்று தமிழர்-தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கும் வகையில் மாநில சுயாட்சி என்பதற்கு தெளிவான கருத்தியலை வழங்கிய முரசொலி மாறனன் அவர்களின் மைந்தன் என்ற முறையிலும், இன்று மாணவர்களிடையே எழுச்சியை தொடங்கி வைத்திருக்கும் லயோலா கல்லூரின் முன்னாள் மாணவர் நீங்கள் என்ற உரிமையிலும், இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றோம்.
தங்கள் தந்தையின் எதிர்பாராத மரணத்திற்கு பிறகு தாங்களும், தங்கள் சகோதரர் கலாநிதி மாறனும், அரசியலிலும், தொழில் துறையிலும் பிரகாசித்து வருகிறீர்கள். அரசியல் அல்லது தொழில் என்று வந்து விட்டால் பங்காளிகள் எதிரிகள் ஆகிவிடுவார்கள் என்பதனை பொய்யாகும் விதத்தில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறீர்கள் என்பதை நீங்கள் இருவரும் நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்வதை பார்த்து பெருமையடைந்திருக்கின்றோம். நீங்கள் இருவரும் சென்னை போட் கிளப் சாலையில் ஒன்றாக வசிக்கீறீர்கள்.
     தாங்கள் மத்திய சென்னை தொகுதியில் முதன் முறையாக 2004 ம் ஆண்டு 1,34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரி பதவியில்  அமர்ந்தீர்கள், ஆனால் உங்கள் குடும்ப நிறுவனமான சன் டிவி-தினகரன் அலுவலக தாக்குதலில் மூன்று உயிர்கள் பலியானதால் திமுக தலைமை மீது முரண்பட்டு தங்கள் பதவியை விட்டு விலகினீர்கள்.
அதன் பிறகு 2009ம் ஆண்டு நடந்த மத்திய சென்னை தொகுதியில் கடும் போட்டிக்கிடையே 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்.  
தமிழகத்தில் எழுந்த மாணாவர் எழுச்சிக்கு பிறகு, தாங்கள் சார்ந்திருக்கும் திமுக கட்சி மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர் பிரச்சணையில் துரோகம் செய்து விட்டது என்று ஆதரவை விலக்கி கொண்டது.
இலங்கை கிரிக்கெட் அணி நம் நாட்டில் விளையாடுவதை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதனை மேல்நாட்டவர் அவதானிக்கும் போது அவர்கள் நம்மை தவறாக மதிப்பிடக்கூடிய சூழ்நிலைகளும் உள்ளன. இதன் மூலம் மேல் நாட்டவர், வட இந்திய மக்கள் நாம் இந்த அணிக்கு கொடுக்கும் ஆதரவை எப்படி நோக்குவார்கள் என்பதனையும், சிங்களவர் எப்படி கிரிக்கெட் மூலம் இனப்படுகொலையை மறைக்கலாம் என்று சிந்திக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் கவனித்தாக வேண்டும்.
இன்று இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான அழுத்தம் உலக அளவில் எழுந்து வருகிறது, இதற்காக தமிழகத்திலும், புலம் பெயர் அமைப்புகளும் போராடி வருகின்றனர். தமிழக மாணவர் சமூகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் முயற்சிகளை பலவீனப்படுத்துவதற்காகவே இலங்கை அரசு விளையாட்டு என்ற பெயரில் தனது பிரச்சாரத்தை செய்ய முயல்கின்றது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு இலங்கை என்றாலே கிரிக்கெட் தான் நினைவுக்கு வருகிறது. ஆக இனப்படுகொலை புரிந்த இலங்கை என்பதை அவர்களுக்கு நாம் எப்படி அறிவிக்கப் போகிறோம்?  இலங்கைக் கிரிக்கெட்டை இங்கே நாம் தடை செய்வதே அதை நோக்கிய  சிறந்த நகர்வாக இருக்கும்.அப்படிப்பட்ட தடை விதிக்கப்படுமானால் இலங்கையின் இனவெறி முகம் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் என்பது உறுதி.

1974 ஆம் ஆண்டு அமிர்தராஜ் சகோதரர்கள் தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதி போட்டியில் கோப்பை வெல்ல வாய்ப்பு இருந்தும், தென்னாப்பிக்காவின் இனவெறியை கண்டித்து அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி இந்திய அணியை போட்டியிலிருந்து விலக செய்து இனவெறிக்கு எதிரான தனது போராட்ட்த்தினை வெளிக்காட்டினார்.
இலங்கை அணித் தலைவனாக இருந்த குமாரா சங்காரா இலங்கையின் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு முன் மும்பையில் ''உலகக் கோப்பையை வெல்வதே (எங்களுக்கு) எல்லாமும் ஆகும். நாங்கள் கடினமான காலத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்கள் நாட்டுக்காக பலபேர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். இப்புதிய எதிர்காலத்தில் இச்சூழ்நிலையில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றால் அது மேலும் மகிழ்ச்சியை ஊட்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இலங்கையின் தேசியக் கொடியோடு வருகின்றார்'' எனப் பேசிய சொற்களில் தமிழினத்தைக் கொன்ற பெருமிதமும் அத்தோடு போதையூட்டுகிற உலகக் கோப்பை பெறுகிற கனவை இணைக்கும் இனவெறியும் தெளிவாகப் புலப்பட்டது.
தாங்கள் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான சாட்சிகள் உள்ளன. போர் அல்லாத பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்று கலைஞர் தெரிவித்துள்ளார். பாலச்சந்திரனின் புகைப்படங்கள் இலங்கை ராணுவத்தால் எடுக்கப்பட்டது. விசாரணை நடத்தினால் இலங்கையின் போர்க்குற்றங்கள் வெளிவரும். இலங்கைக்கு இந்திய ராணுவம் உணவுக்கப்பல்களை அனுப்பியபோது பெருமைப்பட்டோம். இளைஞர்கள் உங்கள் நடவடிக்கைகளை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள்.  என்று 07.03.3013 அன்று நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க உரையாற்றியதை யூடூப்பில் திரும்ப திரும்ப பார்த்து உங்களுக்குள் இவ்வளவு உணர்ச்சிகளா என்று நாங்கள் உறைந்து போனோம். http://www.youtube.com/watch?v=jbplTwB2RR4
IPL 2013 கிரிக்கெட் சீசனில் (ஏப்ரல் 3 முதல் மே 26 வரை) நடைபெறும் போட்டிகளில் தங்கள் குடும்ப நிறுவனமான சன் தொலைக்காட்சி நிறுவனம் தனது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோருக்கு தலா ரூ.3.5 கோடிக்கு சம்பளம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் சுமார் 15 போட்டிகளில் சென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் விளையாட போகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் 10 சதவீதம் இலங்கை கிரிகெட் வாரியம் மூலமாக இலங்கை இனவெறி அரசுக்கு போய் சேருகின்றது. இது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்.
இச்செயலை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழிச்சொல்லை கொண்டு வந்து சேர்த்து விடுவது மட்டுமல்லாமல், வருகின்ற நாடாளுமனற தேர்தலிலும் உங்களுக்கும், நீங்கள் சாந்திருக்கின்ற  திமுக-விற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்ப்படுத்தும் என்பது உறுதி.
எனவே தமிழ்நாட்டின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் முயற்சி எடுத்து ஹைதிராபாத் சன்ரைசர் அணியில்ருந்து இனபடுகொலையாளர்கள் குமாரா சங்ககாரா, திசாரா பெரிரா ஆகியோரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம். 
இப்படிக்கு
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம். தமிழ்நாடு

Wednesday 20 March 2013

தீ... பரவட்டும். SDPIன் போர் முழக்கம்

தீ பரவட்டும்....
இன்று திருப்பூர் SDPI கட்சியின் சார்பில்சிங்கள இனப்படுகொலையார்களை கண்டித்து தலைமை தபால் நிலையம் முற்றுக்கையும், சாலை மறியலும் எழுச்சியுடன் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமையில் நடந்த இந்த மறியலில்  இன படுகொலையாளர்கள் ராஜபக்சே சகோதரர்களின் கொடும்பாவி எரிக்கப்பட்டது  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.டி.பி.ஜ தோழர்களை காவல்துறை கைது செய்து பின்பு மாலையில் விடுவித்தனர்.

போராட்ட கானொளியும், புகைப்படங்களும்....

Tuesday 19 March 2013

மாணவர்கள் எழுச்சியால் தினறிய திருப்பூர்....


இன்று திருப்பூரில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டமும் அதை தொடர்ந்து மாணவர்கள் சாலையை மறித்து மறியல் போராட்டமும் நடத்தினார்கள்.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த மாணவர் போராட்டம் மாலை 3 மணிவரை எழுச்சியுடன் நடந்தது.
திருப்பூர் மாவட்ட வரலாற்றில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் திருப்பூரை முற்றிலும் முடக்கிப்போட்ட நிகழ்வாக மாணவர் போராட்டம் அமைந்தது.
65க்கு பிறகு மாணவர்கள் ஒரு அரசியல் கோரிக்கைகாக வீதியில் இறங்கி எழுச்சியுடன் போராடுகிறோம் என மறியலில் இருந்த மாணவர்கள் தெளிந்த அரசியலோடு பேசியது மாணவர்கள் நமக்கு நிச்சயம் போராட்ட அரசியலை கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுக்கமுடியாது.
மாணவர்களோடு பெரும் திரளாக மாணவிகளும் எழுச்சியுடன் பங்கு பெற்று வின் அதிர முழக்கமிட்டது அங்கிருக்கும் பார்வையாளர்களை உணர்சியில் ஆழ்த்தியது.
சிலர் மக்களுக்கு இடையூறு என்று பேசும் பொழுது பொதுமக்களில் பெரும்பான்மையோர் நாங்களும் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறோம் என்றும் அன்பு மாணவர்களே இன்றைக்கு உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்று கூறும் போது என் மனம் அந்த இடத்தில் நெகிழ்ந்தது.
அன்பான செல்வங்களே...
நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள் போராட்டங்களை...
மாவோ சொன்னார்
இளையோரே நீங்கள் அதிகாலை சூரியன்கள்
இந்த உலகம் உங்களுடையது, எங்கள் உடையதும்தான்
இறுதியில் ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகம் உங்களுடையதே..!

அன்பு செல்வங்களே உங்களை கட்டி அனைக்கிறேன்...
தீ பரவட்டும்..
திருப்பூர் வழிகாட்டட்டும்...!

Saturday 8 December 2012

எங்கள் காஷ்மீர்

அல்லாவே எங்களின் தாய் பூமி
பூ வாசம் பொங்கிய டால் ஏரி
பூவனம் போர்க்களம் ஆனதேனோ
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ
யாஹ் அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாதா
யாஹ் அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா
உம்மை நானும் கேட்பது மீண்டும் எங்கள் காஷ்மீர்
யாஹ் அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாத
யாஹ் அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா
அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே கல்லறை தோட்டம் ஆனதா
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே இரத்த கோலம் பூண்டதா
வாழ்கையே இங்கு தான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்களின் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓஹ் எங்கள் காஷ்மீரின் ரோஜாப்பூ
விதவைகள் பார்த்து அழத்தானா
எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா
எங்களின் மண்ணில் குண்டு வைத்து எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில் கத்தி வைத்து குத்தும் சாலம்
ஓஹ் அல்லா எங்கு போகும் காஷ்மீர் புறாக்கள்
ஓஹ் அல்லா என்று தோன்றும் காஷ்மீர் விழாக்கள்
எங்கள் அன்றைய காஷ்மீர் எங்கள் காஷ்மீர்
எங்கள் சொர்க்க பூமியை இன்று சாக்கடையை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை பலி கேட்கும் சதி எல்லாம் யார் செய்தார்
கலவரம் முடியுமா நிலவரம் மாறுமா
எங்கள் வீட்டு தோட்டம் முன்பு போல் பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவினை வென்று வரவேண்டும்
இந்த நிலையை தந்ததாரோ புரியவில்லை
கண்களை மூடியும் தூக்கம் இல்லை
மேகம் கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே...
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்!!!!

Friday 23 November 2012

தொள்ளாயிரம் சரிகளும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களும் -தமயந்தி- (சிறுகதை, 2009. feb)


எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டடோம்.
என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம் ஆயினும் இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளி விட்டீர்.
இழிவு படுத்தி விட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படி செய்தீர்.
எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.
உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கி விட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச் சிதறியோடச் செய்தீர்.
நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்று விட்டீர்.
அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்து விட்டீர்.
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்.
எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளாக்கினீர். வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர் ஏனைய மக்கள் எங்களைப் பார்த்து தலையசைத்து நகைக்கின்றனர் (திருப்பாடல்கள்; 44: 8-14) 
 
சித்திரையைச் சுட்டெரிக்கும் கத்திரி வெய்யிலில்கெட்டில் பெரியமுனங்கின் கரும்பாறைகள் கொல்லன்பட்டறை அடுப்பாய் கொதித்துக் கிடக்கும் சொந்தமாயொரு வள்ளம் வைத்திருக்க வக்கற்றதோர் கடலவன் அலைவாய்க் கரையில் இறங்கிப் பட்டியிழுத்து முனங்கில் கடிப்புத் தட்டி துடிப்பானதை பறியெடுத்துப்போக, சீண்டவோர் காகம்கூட இல்லாத சாபக்கேடாய் சாதாளைகளும் காரற்குஞ்சுகளும் முனங்குப் பாறையில் பொரிந்து கிடக்கும்.

எனது மண்டையோட்டினுள் கிடக்கும் தேய்ந்துபோன மூளையுமதுபோல் காரல்கருவாடாய் காய்ந்து கனக்கும். மூக்குத்துவாரங்களுள் மூளைப்புழுதி மணக்கும். ஆயினும் என்னுடல்மீது எண்ணையை ஊற்றி கொளுத்துமளவிற்கு எந்தச் சலவையும் இன்னமும் எனது மண்டையை ஆளுமை கொள்ளவில்லை என்பது மட்டும் நிசம். இருபகுதியும் போர் பொருத அவர்களும் இவர் களும் சொற்பம் சொற்பமாய் சாகிறார்கள். இரு பகுதிகளுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட எனதூர்ச் சனங்களோ அவர்களையுமிவர்களையும் விட அதிகமாகவே சாகிறார்கள். என்ன நடக்கிறது, ஏன் சாகிறோம் என்பதெதுவும் தெரியாமலே சிதறிச் சாகிறார்கள்.

இந்த உத்தரிப்பு ஸ்தலத்துக்குள் எப்படி மேய்த்து வரப்பட்டார்கள் என்ற சூட்சுமத்தைக்கூட இந்த நொடிவரை அறிந்திலார். யாழ்ப்பாண வெளியேற்றத்தின் போதிலிருந்தே இது இவர்களுக்குப் புரியாத புதிர் மட்டுமல்ல இவர்களது வாழ்வுக்கும் தொழிலுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தமில்லாத நிலமும்தான். சிங்கமும் புலியும் இவர்களுக்கான வாழ்வை வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் உப்புச்சோளகத்தில் கறுப்பும் சிவப்புமாய் கொப்பு மொய்த்துக்கிடக்கும் ஈச்சம் பழங்களைப்போல் மடிநிறைய மரணங்களை வைத்திருந்து நேரகாலபேதமின்றி அள்ளியள்ளியே வழங்குகிறார்கள்.

'ஐயோ என் சனமே! இந்த ஈனக்கொலைச் சாதியால் கொத்தும் குலையுமாய் கொல்லப்படவோ கொண்டு செல்லப்பட்டீர்?' என ஒவ்வொரு கணமும் மனம் ஒப்பாரியிட்டுக் கொண்டிருக்கும். வன்னிக்காட்டில் மிருகங்களின் மத்தியில் சாவைச் சுமந்தலையும் என் சனங்களோடு கொஞ்சம் என்னைப் பேச விடுங்கள். நாளை அவர்கள் இருக்கமாட்டார்கள் என்றென் புத்தி சொல்கிறது. அதற்குள் அவர்களது நினைவுகளோடு சற்று நான் பேசியாக வேண்டும்.!

அல்வீன்.
நல்ல வடிவான கருப்பி.
என்ர அம்மாவின்ர ஒண்டுவிட்ட அண்ணன் யோசையின்ர மூணாவது மகள். எனக்கு மச்சாள். என்னைவிட ரெண்டு வயசு மூத்தவள். ஆனால் என்னோடதான் அஞ்சாம் வகுப்பு மட்டும் படிச்சுப் போட்டு பாதியிலயே நிண்டிட்டாள். என்னைவிட கெட்டிக் காரியெண்டுஞ் சொல்லலாம். எண்டாலும் அவள் பாதியிலயே பள்ளியால நிண்டிட்டாள். ஏனென்டு கேட்டால் பேரன் பேத்தி வயசானதுகளாம், தனிய ஒரு கொட்டிலில இருக்குதுகளாம், அதுகளுக்குத் தோதா உதவிக்கிருக்கச் சொல்லி யோசைமாமா அவளப் பள்ளிக்கூடத்தால மறிச்சுப் போட்டார்.
என்னில சரியான நேசமானவள். பவுண் மச்சான், பவுண் மச்சான் எண்டு அவள் என்னக் கூப்பிடேக்கயெல்லாம் எனக்கெண்டால் சரியான வெக்கமாயுங் கூச்சமாயிமிருக்கும். அதோட பயமாயுங் கிடக்கும். ஏனெண்டால் ஈஸ்வரராசன், எட்மன்ட் எண்டு ரெண்டு வளந்த மாடுகளும் எங்களோட படிச்சவங்கள். ரெண்டும் சரியான அம்மண முத்தையாக்கள். 'மச்சான், மச்சான்' எண்டு இவள் என்னக் கூப்பிடுகிறதக் கவனிச்சாங்களெண்டால் அவ்வளவுதான். என்னையும் அல்வீனையும் ஒண்டாக்கிப் பட்டந் தெரிப்பாங்கள். இதில ஈஸ்வரராசன் கொஞ்சம் பரவாயில்ல. தூசணம் சொல்லுவானே தவிர குரங்கு வேலயள் காட்டமாட்டான். எட்மன்ட் பொல்லாதவன். அடிப்பான். கண்டதுக்கெல்லாம் சும்மா நொட்டுவான். சுவருகளிலயெல்லாம் கரியால, செங்கட்டியால தூசணம் எழுதி வைப்பான். மாஸ்ரர்மார் உடனயே கண்டுபுடிச்சுப் போடுவினம். செவுள் அடியும் வாங்குவான். பள்ளிக்கூடம் முழுக்க இவங்கள் ரெண்டு பேற்ற ஆட்சிதான்.

எங்கட பள்ளிக்கூடத்துக்கு வாற மாஸ்ரர் டீச்சர்மார் எங்கட கிணத்துத் தண்ணி குடிக்க மாட்டினம். இவயளுக்கு தண்ணி யெடுத்துக்கொண்டு வாறதுக்கெண்டே மூண்டு சாராயப் போத்தல் பள்ளிக்கூடத்தில இருக்கு. ஒண்டரக் கட்டைக்கு நடந்துபோய் பறையன்கேணி ஒழுங்கைக்குள்ள இருக்கிற ஆசைமுத்து எண்ட வெள்ளாளவீட்டுப் பைப்பிலதான் தண்ணி எடுத்துக்கொண்டு வரவேணும். இவங்கள் ரெண்டு பேருந்தான் அதுக்கும் போவாங்கள். மாரிகாலத்தில தண்ணிக்குப் போயிற்று வாற வழியில எல்லாப் போத்திலுகளிலயும் ரெண்டு ரெண்டு மிடறு தண்ணி குடிச்சுப் போட்டு, வழியில தொட்டந் தொட்டமாக் கிடக்கிற மழத் தண்ணியில கையால தெளிச்சு அள்ளி போத்தலுகளுக்க விட்டுக்கொண்டு வருவாங்கள். சிலவேளயில எச்சில் துப்பிக்கொண்டு வருவாங்கள். இவங்கள் தண்ணியெடுத்துக் கொண்டு வாறதுக்குள்ள சமயபாடம் முடிஞ்சு, தமிழும் பாதி முடிஞ்சு போயிரும். எட்மன்ட் எல்லாப் பாடத்துக்கும் அடி வாங்குவான். விழுகிற அடி நோகாமலிருக்கிறதுக்காக ஒவ்வொருநாளும் காற் சட்டைக்குமேல இன்னொரு காற்சட்டை போட்டுக் கொண்டு வருவான். இன்ரேவல்ல கிளித்தட்டு விளையாடேக்க இவங்கள ஒருத்தரும் அவுட்டாக்கக் கூடாது. அப்பிடி ஆராவது அவுட்டாக்கினால் அடிப்பாங்கள். சரியான அட்டூழியம் புடிச்சவங்கள்.

எனக்கு வெல்லக்கட்டியெண்டால் சரியான விருப்பம். அப்பயெல்லாம் எங்கட இடங்களில இந்த அச்சுவெல்லம் லேசில கிடைக்காது. இது இந்தியாவிலயிருந்து வல்வெட்டித் துறையாற்ற கள்ளக்கடத்தல் போட்டுகளிலதான் வரும். இடைக்கிடை யோசை மாமா வல்வெட்டித் துறை ஆரோய்க்கியசாமியின்ர போட்டில ஓட்டியாப் போய் வருவேர். யோசைமாமா வீட்டில எந்த நேரமும் அச்சு வெல்லம் இருக்கும். எனக்கு வெல்லக் கட்டியெண்டால் விருப்பமெண்டு தெரிஞ்சு பள்ளிக்கூடத்துக்கு வரேக்க அல்வீன் மச்சாள் நெடுகக் கொண்டு வருவாள். வெல்லம் மட்டுமில்ல ஒவொரு நாளும் ஏதெண்டாலும் கள்ளத்தீன் கொண்டுதான் வருவாள். ஊர்நெல்லிக்காய், கறுவாப் பட்டை, மாங்காய், இலந்தப்பழம், பால்ரொட்டி... இப்பிடி. இன்ரேவல் நேரத்தில ஈஸ்வரராசனுக்கும் எட்மன்ட்டுக்கும் தெரியாமல் ரெண்டுபேரும் பங்கு போட்டுத் தின்னுவம். அல்வீன். நல்ல வடிவான கருப்பி.

ஒருநாள் ராஜகுமாரி கூத்து ஒத்திகய எங்கட அண்ணாவியார் வாசகசாலைக்குள்ள நடத்திக் கொண்டிருந்தேர். அதில பொம்பிளத் தளபதி வேசம் எனக்கு. ஊரை விட்டு நான் வெளிக்கிடுகிற வரைக்கும் எனக்குப் பொம்பிள வேசம் தான் கிடைக்கிறது. ஒத்திக முடிய இருட்டாகீற்று. இண்டைக்குவர கரண்ட் இல்லாத ஊர்தான் எங்கட ஊர். காப்போரெத்தினம் எலக்சனுக்காக ரெண்டு கரண்டுக் கட்டயக் கொண்டு வந்து ஊர் வாசலில நட்டதோட சரி. அவருக்கு வோட் பண்ணயில்லயெண்டதுக்காக இண்டைக்கு வரைக்கும் கரண்ட் கணைக்சனே இல்ல. தமிழரசுக் கட்சிக்கோ இல்லாட்டிக்கு கூட்டணிக்கோ இந்த ஊரச்சனம் வோட்டுப் போட்டு நானறியன். ஏனெண்டு சொன்னால் இவங்கள் வந்து 'கிழக்கு மேற்கு, சூரியன் உதயம், ரெத்தத்திலகம் தனிராச்சியம்...' இப்பிடிச் சொல்லுற ஒரு தாலியறயும் சனத்துக்கு விளங்கிறதுமில்ல, தேவயுமில்ல. கடலையும் கரையயும் விட்டா அதுகளுக்கு வேறையரு புருவத்தோரியும் தெரியாது. இதெல்லாந் தேவயுமில்ல, என்ன சவத்துக்கு.. எண்ட எண்ணம் சனத்துக்கு.

தங்களுக்கு வோட் போடுறதில்லயெண்டு இந்தக் கிராமத்த கூட்டணிக்காரர் எவ்வளவு பழி வாங்கினாங்களெண்டது ஊர்ச்சனம் எல்லாத்துக்கும் தெரியும். குடி தண்ணிக்கே சனத்தத் தவிக்க விட்டவங்கள். உப்புத் தண்ணியக் குடிச்சுத்தான் முழுக் கிராமமுமே உயிர் வாழ்ந்ததுகள் எண்டால் நம்ப மாட்டீங்க.

வாசகசாலயிலயிருந்து எங்கட வீடு கொஞ்சம் தூரம். அல்வீன் வீடு பக்கத்தில. அவள் எந்த ஏமஞ் சாமமெண்டாலும் பயப்பிடமாட்டாள். தனியத் திரிவாள். பேய்க்குப் பயப்பிடயே மாட்டாள். அல்வீன் வீட்ட போனால் அவளயும் துணைக்குக் கூட்டிக்கொண்டு எங்கட வீட்ட போகல்லாம் எண்ட ஐடியாவில அங்க போக வெளிக்கிட்டன். கச இருட்டு. வாசகசாலயிலயிருந்து அல்வீன் வீட்ட சரியா லெக்குப்பாத்து மண்டேக்குள்ள பதிச்சுப்போட்டு, கண்ண இறுக்கி மூடிக்கொண்டு ஓடினன். லெக்கு கொஞ்சம் கணக்குப் பிசகி டேவிற் பெரியையா வீட்டு முள்ளுக்கம்பி வேலிக்குள்ள நேர போய்ச் சொருகீற்றன். முள்முடி அறைஞ்ச யேசுநாதர் மாதிரி முகமெல்லாம் ஒரே ரெத்தக்காடு. கைவிளக்கு வெளிச்சத்தில என்ர கோலத்தப் பாத்திற்று அல்வீன் கத்த வெளிக்கிட்டாள். சரியாத்தான் பதகளிச்சுப் போயிட்டாள். அயலட்டமெல்லாங் கூடிப் போச்சு. அப்பதான் தெரிஞ்சுகொண்டன் அல்வீன் மச்சாள் என்னில சரியான பாசமெண்டு. அவள் அண்டைக்குக் கத்தின கத்தும் துடிச்ச துடிப்பும் இப்பவும் என்ர மண்டேக்குள்ள வலிச்சுக் கொண்டுதான் கிடக்கு.

ஆண்டு:1980 , மாதம்: மார்கழி
திகதி: 3 ,
கிழமை: புதன்,
நேரம்: 7.15 காலை.
காலநிலை: மெல்லிய மப்புமந்தாரம்.
மழையின் அறிகுறியாய் வாயூறியபடி.

களங்கண்டி வலையிழுக்கப் போன ஐயா கடலாலை வந்திருவேர். வாறதுக்குள்ள புட்டவிச்சு கறியையுங் கூட்டி முடிச்சிட்டால் ஐயா கடலால வந்தோண்ண அடுப்பில வச்சிரலாம். ஐயா களங்கண்டியிழுத்து துடிக்கத்துடிக்கக் கொண்டுவாற குஞ்சுக் கணவாயில எடுத்து மைக்கூடும் போட்டு அம்மா அல்லது ஆச்சி புளியவியல் வச்சினமெண்டால் ஒரு தூக்குத் தூக்கி சிரசில அடிக்கும்.

"பவளம் மாமாவின்ர கடைக்கு ஓடிப்போய் தேங்காய், வெங்காயம், செத்தல்மிளகாய், புளி வாங்கிக்கொண்டு கெதியா ஓடிவா ராசா" எண்டு அஞ்சுரூவாயத் தந்து அம்மா அனுப்பி வச்சா. சட்டெண்டு மூளையில ஒரு பொறி தட்டிச்சுது. சரியா ரெண்டுவருசக் கனவு. இவ்வளவுகாலமும் வீட்டுக்குத் தெரியாமல் இயக்கத்தின்ர கல்வி வட்டத்துக்குப் போய் வந்து கொண்டிருந்த நான், வீட்டவிட்டு வெளிக்கிட்டுப் போறதுக்கு நல்லவளம் பாத்துக் கொண்டிருந்தன். 'இது தான் தரணம் வெளிக் கிடடா சிங்கா' எண்டு அம்மா தந்த அஞ்சு ரூவா என்ர கையிலயிருந்து கரண்ட் அடிக்கிற மாதிரி நல்லொரு மணம் மணந்து சுரண்டிச் சுரண்டிச் சிக்னல் குடுத்துது. அதோட மழ வாற துக்கு அறிகுறியா புழுதியும் நாசிக்குள்ள அடிச்சுது. தேகமும் ஒருமாதிரியாக் குளுந்துகொண்டு வந்துது. அதொரு பயமில்லாப் பதட்டமாயும், நல்லாயுமிருந்துது. மசிரவிட்டான் சிங்கன். தங்கச்சியின்ர மொனிட்டர் கொப்பியில ஒரு ஒற்றயக் கிழிச்சு 'நான் நாட்டுக்கு சேவை செய்யப் போகி றேன் தேடவேண்டாம்' எண்டமாதிரித்தான் ஏதோ சரியா ஞாபகமில்ல, எழுதி கொடியில கிடந்த ஐயாவின்ர சேட்டுப் பையுக்குள்ள வச்சுப் போட்டு உடுத்தியிருந்த சாரத்தோடயே 180ம் நம்பர் 8மணி பஸ் எடுத்து யாழ்ப்பாணம் போனனான்தான், (அப்ப எனக்கு 18வயசும், 7மாசமும், 24 நாளும், 9மணித் தியாலமும் முடிஞ்சிருந்துது. எண்ட மட்டில நான் குழந்தப் போராளியில சேர்த்தியில்ல)

இயக்கத்துக்கு நான் ஓடிப்போய் 56நாளுக்குப் பிறகிட்டு 28.01.1981 புதன்கிழம காலம்பிற பத்தேமுக்கால்போல ரெண்டு தோழர்மாரயுங் கூட்டிக்கொண்டு எங்கட கிராமத்துக்குள்ள வந்துகொண்டிருக்கிறன். லவுட்ஸ்பீக்கர் பாடிக் கேட்டுது. நாங்கள் வாறது தெரிஞ்சு கொஞ்சச் சனம் எங்களத் தேடி ஓடி வந்திச்சினம். தவமண்ணன், ரெத்தினமண்ணன், துரையண்ணன், பூவானத்தான், சில்வேஸ்ரர் சின்னையா, கிறிஸ்தோப்பு மாமா, முத்துக்கிளி மச்சாள், ராசமணியக்கா, தங்கச்சி யூடித்... இப்பிடிக் கனக்கச் சனம். எல்லாம் சொந்தக் காரச்சனம்தான். என்ர கிராமத்தில இருக்கிற எல்லாச் சனமுமே எப்பிடித்தான் சுத்திச் சுத்திப் பாத்தாலும் எனக்கு ரெத்த உருத்துகள்தான். குய்யோமுறையோ எண்டு கத்திக்கொண்டு ஓடிவந்த சனங்கள் என்னையும் ரெண்டு தோழர்மாரயுந் தூக்கித் தலைக்கு மேல வச்சு சுற்றுப்பிரகாரமாக யோசை மாமாவின்ர வீட்டுப் பக்கம் கொண்டு போச்சினம். ஊர்ச்சனம் முழுக்க யோசை மாமா வீட்டைதான். யோசைமாமா வீடு பந்தல் போட்டு வடிவாச் சோடிச்சிருந்துது. அல்வீனுக்கு கலியாணம். இருபது வயசிலயே அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுப்போச்சு. எங்கட ஊரப் பொறுத்த மட்டில பொம்பிளைக்கு இருபது வயசு பக்குவத்தோதான வயசுதான். முந்தியெல்லாம் அப்பிடியில்ல. பன்ரெண்டு பதின்மூணு வயசிலயே கலியாணங் கட்டி வச்சிருவினம். ஆம்பிளப் பிள்ளயளண்டால் பதினாறு பதினேழு வயசே போதுமெண்டிருந்துது. ஏனெண்டால் அந்த வயசிலயே அவர் ஒரு முழுத் தொழிலாளியாப் போயிருவேர். இப்ப சரியான மாற்றம். சின்ன வயசிலயே கடல்தொழிலுக்கு அனுப்பாமல் தங்கட பிள்ளயளயும் படிப்பிக்க வேணுமெண்ட கொள்க சனத்துக்கு வந்திட்டுது. இப்ப இருபது இருபத்தஞ்சு வயசு வந்தேப்பிறகிட்டுத்தான் கலியாணம்.
பந்தலுக்குள்ள நான் போகமுதலே கலியாணப் பொம்பிள, அவளொரு தேவதை மாதிரியே அச்சொட்டாய் ஓடிவந்தாள். ஆக்களுக்கு முன்னாலயே கட்டிப்புடிச்சுக் கொஞ்சினாள். 'என்ர ஆசமச்சான், என்ர பவுண் மச்சான், நீ கட்டாயம் என்ர கலியாணத்துக்கு வருவாயெண்டு எனக்குத் தெரியுமடா' எண்டு அவள் சொல்லிக்கொண்டே கண்ணெல்லாங் கலங்கிப்போனாள். எனக்கும் சரியான சங்கடமாயிருந்துது. கால்ப் பாதங்கள் ரெண்டும் வேர்த்துக் கசிஞ்சு பாட்டாச் செருப்பு வழுக்கிறமாதிரி வந்திற்றுது.

கலியாணச்சாப்பாடு. நினைச்சால் இப்பவும் வாயூறுது. நல்ல கொழுத்த மாட்டிறைச்சிக்கறி. அல்வீன் மச்சாள் என்னயுந் தோழர்களயும் பக்கத்தில இருந்து விழுந்து விழுந்து கவனிச்சாள். இதை எழுதிறபோதுதான் கிட்டடியில நடந்த ஒரு விசயம் நினைவுக்கு வருகுது. தோழர் ஒருத்தரோட ஒருநாள் கதைச்சுக்கெண்டிருக்கேக்க சொன்னன் 'எங்கட கிராமத்தில கலியாண வீடுகளில கட்டாயம் மாடு வெட்டுவம் தோழர்' எண்டு. அவரால நம்பவே ஏலாமல்ப் போச்சு. அவருக்கெண்டால் பெரிய ஆச்சரியமாத்தான் இருந்துது. இப்பவுந்தான் வெளிநாடு வந்ததுக்குப் பிறகும் எங்கட ஊர்ச்சனங்களின்ர கலியாணங் கொண்டாட்டங்களில கட்டாயம் மாட்டுக்கறி சமைப்பம். இங்க வெளிநாடு வந்ததிலயிருந்து வேற ஊராக்களின்ர கனக்கக் கலியாணங்களுக்குப் போயிருக்கிறன். வெறும் மரக்கறிதான். இங்க இருக்கிற தமிழரும் சொல்லுகினம் 'சீ... கொண்டாட்டங்களுக்கு மாட்டுக்கறியா...' எண்டு. எனக்கு ஒரே சிரிப்பாத்தான் வரும். இங்க வெள்ளயளின்ர கலியாண வீடுகளுக்குப் போற எங்கடயாக்கள், அவன் அரையவியலாக் குடுக்கிற மாட்டுச் சீவல அள்ளிவச்சு கழுத்துமுட்டக் கட்டுவினம். ஆனால் வெளியால வந்து ஒண்டுந் தெரியாத ஆக்கள் மாதிரி 'சீ... மாட்டுக்கறியா...?' எண்டு தாளம் போடுவினம். அதென்னவோ எனக்குத் தெரியாது மாட்டுக்கறி இல்லையெண்டால் அது கலியாணம் மாதிரியே எனக்குப் படுகிறதில்ல.

இன்று 27.02.2009.
'அவர்களின் வாய் பேசுவதும், நா உரைப்பதும் பாவமே.
அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்க வைப்பதாக.
அவர்கள் சபிக்கின்றனர்.
அடுக்கடுக்காய் பொய் பேசுகின் றனர்.' (திருப்பாடல்கள்; 59:12)
உக்கிரமடைகின்றது வன்னிப்போர். முன்னேற முடியாமல் சிங்களப்படைகள் முடக்கம். 3நாட்களில் தொள்ளாயிரம் படையினர் பலி. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயம். (தமிழ்வின்- வெள்ளிக்கிழமை, 27பெப்ரவரி 2009, 03:47.55பி.எம்) போன்ற செய்திகளையும், இன்னும் இதேபோல் இன்று இங்கெல்லாம் மனித மூளைகளை மண்டையோட்டினுள்ளிருந்து நாயிழுவை பேயிழுவையாக இழுத்து வெளியில் போட்டு மேய்ந்து கொண்டிருக்கும் இணையத் தளங்கள் சிலவற்றோடும் மாரடித்தோய்ந்து, பிடரிவலி தொடங்கு வதையுணர்ந்து எழுந்திருக்க எண்ணிய போதுதான்; அந்தக் காட்சி பார்வையில் கிடைத்தது. கைதேர்ந்த ஒளிப்பதிவாளரின் கேமராமொழி கச்சிதமாயும், மிக நிதானமாயுமிருந்தது.

உக்கிரப் போர் நிலம் என்கிறார்களே...?
மக்கள் அவலத்தோடு கொந்தளிக்கிறார்கள் என்கிறார்களே...?
பதுங்கு குழிகளை விட்டு வெளியே வந்தால் மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்படுகிறார்கள் என்கி றார்களே...?,
படம் பிடிப்போர் மட்டும் எப்படி நிதானமாய் தங்கள் பணியில் முனைப்போடு இயங்குகிறார்கள்? ஒரு கேமராக்காரனாய், ஒரு போர்ப் படப்பிடிப்பாளனாய் இருந்துகூட யோசித்துப் பார்க்கிறேன். முடியவில்லை. குஞ்சுகுருமான்கள், கிழடுகட்டைகள் முதற்கொண்டு எலும்பும் தோலுமான மக்கள், கும்பல் கும்பலாய் பிணங்களை விலத்தி குடி தண்ணீருக்கும், ஒரு குவளை கஞ்சிக்கும் ஆலாய்ப் பறக்கிறார்கள், ஆனால் இந்த களப்படப் பிடிப்பாளர்கள் எந்த பலத்தின் பின்னணியில் நின்று சூட்டிங் நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுமிடத்து: கொழுப்பெடுத்து, கொலைத் தினவெடுத்துத் திரிந்துவிட்டு, பஞ்சப்பட்ட சனங்களை பலியாடுகளாய் கந்தகத்தீயில் தள்ளிவிட்டு ஓடி ஒளிந்துகொண்ட தலைவனையும், தளபதிகளையும் எண்ணி, கொல்லும் கோபம்தான் எழுகிறது.

ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்.
சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்.
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்.
எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்.
தம் வலையில் சிக்க வைத்து இழுத்துச் செல்கின்றனர்.
அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்.
அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப் படுகின்றனர்.
(திருப்பாடல்கள் 10: 8-10)

Title: The Life and distress of the displaced people in Mullaitivu district.Date filmed: 24.02.2009, Date uploaded: 25.02.2009
கேமரா ஊர்ந்து செல்கிறது. ஒரு தற்காலிக கொட்டகை போடப்பட்ட இடத்தில் கஞ்சி கொடுக்கிறார்கள். சிறுவர்கள், முதியவர்கள், பெண்களென்று பலநாள் பட்டினியில் வாடிப்போன உடலங்களாய் மக்கள் கூட்டம் ஒரு குவளை கஞ்சிக்காக கையில் கிடைத்த தட்டுகள், கோப்பைகள், செம்பு, குவளை என்று ஆளுக்கொன்றை ஏந்திப் பெறுகிறார்கள். அந்த மக்களின் முகங் களைத் தேடி இடையிடையே காமெரா குளோஸ்-அப்பில் செல்லும்போது முகங்களால் வழிந்தோடும் அவமானங்களையும் துடைத்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் குழந்தை குட்டிகளின் உயிர்களைக் காத்தால் போதும் என்பதாய் ஒரு குவளை கஞ்சியைக் கையேந்திச் செல்கிறார்கள். கட்.

'பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக் கொள்ளும்! பச்சிளம் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!' (புலம்பல் 4:4)

68-70 வயது மதிக்கத்தக்க, ஒட்டியுலர்ந்த, ஒரு துணிக்கையளவேயான உயிரைச் சுமந்த ஒரு பெண்ணிடம் கேமரா செல்கிறது.
நிலத்தில் குந்தியிருந்தபடியே ஒப்பாரியிட்டு அழு கிறாள்.
அந்த முதியவளின் ஒப்பாரிகளுக்கிடையில் கொட்டுண்டு சிதறும் வார்த்தைகளையும், அவளையும் ஆடாமல் அசையாமல் கேமரா நிதானமாய் பதிப்பித்துத் தருகிறது.

'மருமகனுக்குப் பேர் செல்லத்துரை. அவருக்கு ஒரே வருத்தமும் காச்சலும்... சுருண்டு கிடந்தவர். என்ர பேத்தி, பன்ரெண்டு வயசு... அதுகளுக்குத் தண்ணி எடுப்பமெண்டு வந்தன்... தண்ணிக்குப்போனா தண்ணி தர மாட்டனெண்டுட்டுதுகள்.. அதோட இங்க நல்ல தண்ணிக் கிணறிருக்காம் எண்டு சொல்லிச்சுதுகள்..... ஓட்டவாளியால உரஞ்சி உரஞ்சிக் கொஞ்சத் தண்ணி..... ஒரு வாளிக்க நிறயக் கொண்ணந்தன்.. ஒரு கடயில கொண்ணந்து வச்சிற்று... என்னால தாங்கேலாமல்ப் போச்சு நெஞ்சுக்குத்து... இந்தத் தேச மெல்லாம் போனன்.... தெரியாது எண்டிட்டினம்.... பேந்து அங்கால இருக்காமெண்டு போக.... அதுக்க கடல்..... ஐயோ...கடல் கடல் கடல்......''
அம்மா அவயளக் காணயில்லயா....?' (மிகத் தெளிவான ஒலிப்பதிவில் இது ஒரு உசாரான இளம் பெண் குரல்)
'இல்லே... என்ர புள்ளயளக் காணே...ன். இந்தத் தேசமெல்லாந் திரியிறேன்... ஒரு கொட்டில் மாதிரி தறப்பாள் போட்டு... செல்லடிக்கு பயத்தில பங்கர் வெட்ட ஏலா தெண்டு... மருமகனுங் குந்திக்கொண்டிருக்கிறேர்... தண்ணி விடாயில வந்தனான்... சமைக்கவுமில்ல, ராத்திரியும் சாப்பாடில்ல, ஒண்டுமேயில்ல அரிசி சாமான் ஒண்டுமேயில்ல ஐயோ.... என்ர பிள்ளயளுக்கு தண்ணி குடுப்பார் ஆருமில்லயே... அந்தக் குஞ்சு... சின்னப் பேரப் பிள்ளக் குஞ்சும் அதுக்க.... ஐயோ.... எல்லாரட்டயுங் கேட்டுட்டே..ன்....''
"உங்கட சொந்தக்காரர் ஒருத்தரயுங் காணயில்லயா....?' (அந்த இளம் பெண்).
"ஐயோ... இல்ல..., இரணடுமடுவில இருந்தே என்ர சொந்தக்காரரக் காணயில்ல....
எல்லாரும் எங்க எவ்விடமெண்டில்ல...."
வன்னிச்சண்டை தொடங்கியதிலிருந்து தினமும் ஒப்பாரி களாலும், மனித ஓலங்களாலுமே மலிந்து நிரம்பி வழிகின்றன தமிழ்த் தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும். ஆனால் இன்று இந்த முதிய பெண்ணின் அவலக்குரல் எனது அடிவயிற்றை ஏதோ செய்து கொண்டிருந்தது. பிடரி நரம்பில் சுள்ளென வலித்தது. அறிமுகமான சுடுமணலின் வாசம் ஒன்று நாசித் துவாரங்களுக்குள் ஊர்ந்து சென்றது.
கேமரா தொடர்ந்து நகர்கிறது. அதே நிதானத்துடன். மேலும் பல மனிதர்களின் அல்லோலகல்லோலமான காட்சிகள்.

'எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
ஆயினும் நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில் நொறுங்கும்படி விட்டுவிட்டீர்.
சாவின் இருள் எங்களைக் கவ்விக் கொண்டது' (திருப்பாடல்கள்; 44:19)
மீண்டும் மீண்டும் அந்த முதுமையின் அவலமான ஒப்பாரியும் ஓலமும் நெஞ்சைப் பிசைந்தது. இரத்த நாளங்களை விட்டு இதயத்தைத் தனியாக அறுத்தெடுத்து தரையில் போட்டது. மீண்டும் எனது மண்டைக்குள் அதே வலி.
'அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்.
நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்.
என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்.' (புலம்பல் 1: 14-15)

இணையத்தளங்களை நிறுத்திவிட்டு, அறுந்து தொங்கும் நெஞ்சக்கூட்டை புகையால் நிரப்ப ஒரு சிகரட்டை எடுத்து மூட்டிக் கொண்டேன். புகை வளையங்களும் ஒப்பாரியிட்டபடியே காற்றில் கரைந்தன.

'நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்.
எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது' (திருப்பாடல்கள் 44:25)

தொலைபேசி மணி. தங்கை யூடித். அழுகை விசும்பலுக்கி டையே 'அண்ணே... அல்வீன் மச்சாளப் பாத்தனியாண்ணே....?' எனக்கேட்டாள்.
'எங்கேயடி....?' என்றேன். நான் பார்த்த அதே வீடியோக் க்ளிப்பைச் சொன்னாள். 'அதில எங்கயடி....?' கேட்டேன். 'அதில கிழவியண்டு குளறிக் கொண்டிருக்குதண்ணே..., அதுதானண்ணே...."
''விசர்க் கதை கதைக்காத. உனக்கார் சொன்னது..?''
"மன்னாரிலயிருந்து ராசுக்குஞ்சியப்பு இப்ப கொஞ்சத்துக்கு முதல்த்தான் எடுத்தவர். அவர்தானண்ணே சொன்னவர். இப்பிடித்தான் சனமெல்லாம் எலும்புந் தோலுமா இருக் காம்... எங்கட கனக்கச் சனம் எங்கெங்க இருக்குதெண்டே தெரியாதாமண்ணே. அந்தக் கவுண்டு போவானுக்கு ஒரு கொள்ளநோயும் வராதா பாலதீவு அந்தோனியாரே? அவன்ர தலயில இடி விழாதா மடுவுமாதாவே...?!" ஒரு கிழவிபோல் திட்டினாள். ஒரு குழந்தைபோல் தேம்பி அழுதாள்.

வாயில் எரிந்து கொண்டிருந்த சிகரட் ஆட்லறியாய் வெடித்துச் சிதறியது. சிதறித் தெறித்து சுவரெல்லாம் ஒட்டிக்கொண்ட என் இறைச்சித் துண்டங்களை ஒரு ஒப்பாரி வந்து கூட்டி அள்ளிக் கொண்டிருந்ததை எனது வீட்டுக்கூரையின் மீதிருந்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அல்வீன் மச்சாளின் ஒப்பாரி. எனது அழகிய கருப்பியின் ஒப்பாரி.

28.02.2009, நேரம்: 00:07
தொள்ளாயிரம் சரிகளும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான காயங்களின் சமன்பாடுகளும், என் வாயிலிருந்து வெடித்த ஒரு ஆட்லறியில் சுக்கல் சுக்கலாய் சிதறிப் போயின.
'வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!' (திருப்பாடல்கள் 46: 8-9)
 நன்றி. பிறத்தியாள். இனையம்.

Tuesday 18 September 2012

தமிழகத்தில் நடப்பது போலீஸ் ஆட்சியா..? மக்களாட்சியா…? ஜனநாயக வழியில் சென்னையில் போராடிய இசுலாமியர்கள் மீது தாக்குதல்



அன்பான உறவுகளே…
கடந்த இருவாரங்களாக தமிழக சூழல் மட்டுமல்ல உலக அளவில் நெருப்பாய் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது உலக இசுலாமிய மக்களின் உணர்வு போராட்டம்….
இசுலாமியர்கள் தங்கள் உயிரை விட மேலாக கருதும் முகமது நபியை அமெரிக்காவின் கைகூலி இசுரேலின் செல்லகுழந்தை ஒன்று கேவலமாக சித்தரித்து திரைப்படம் எடுத்து உலக இசுலாமியர்களின் வெந்த புண்னில் வேல்பாய்சியது.
உலக வல்லாதிக்க அமெரிக்காவோ அவனின் ஆடாவடி செயலுக்கு வக்காலத்து வாங்கி தனது இசுலாமிய எதிர்ப்பை மீண்டும் பதிவு செய்துள்ளது. உலக அளவில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், என்னை வள நாடுகளை தனதுகைக்குள் வைத்துக்கொள்ள தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இசுலாமிய நாடுகளை குறிவைத்து உலக பொது எதிரிகளாக இசுலாமிய மக்களை அடையாலம் காட்டும் வகையில் தனது நச்சுகருத்துக்களை பரப்பியது ”இசுலாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் இசுலாமியர்களே” என்ற நச்சு விதையை பரப்பி உலக மக்களிடமிருந்து இசுலாமியர்களை தனிமை படுத்தும் போக்கை கையாண்டு வரும் வேலையில் இப்படியான திரைபடத்தை அமெரிக்க மன்னில் இருந்து ஒரு ஊடக பயங்கரவாதத்தை பரப்பும் பயங்கரவாதியாக செயல்பட்டு இன்று உலக அளவில் ஒரு அமைதின்மையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இந்நச்சு விதையை அமெரிக்காவின் கோர முகத்தை அம்பல படுத்தி  தமிழக இசுலாமிய மக்கள் கொதிதொழுந்து வீதிகளில் எழுந்து போராடினார்கள் அமெரிக்கா தூதரகம்  இசுலாமிய மக்களின்முற்றுக்கைகுள் முழுமையாக வந்தது.
அமெரிக்காவை எதிர்த்து போராட்டமா..?
அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதலா? என்ன நடக்கிறது தமிழகத்தில் உலகையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர துடிக்கும் அமெரிகாவின் தூதர்களுக்கே பாதுகாப்பு இல்லையா..
இந்தியாவில் நமது ஆட்சிதானே நடக்கிறது நமது அடிமைதானே அங்கே பிரதமர் இப்பதானே நாம் சொன்னதை எல்லாம் கேட்டு அணு ஒப்பந்தம், அண்ணிய நேரடி முதலீடு என வால் ஆட்டும் நாய் போல் கேட்கும் அடிமை நாட்டில் எப்படி நமக்கு எதிராக போராட்டம்.
யோசித்து யோசித்து மண்டை பிளக்கும் தலைவலியோடு போடுடா போனை அந்த அடிமைகளுக்கு அவ்வளவு திமிரா யார் கொடுத்த தைரியம் என டெல்லி அடிமைக்கு போன் போக தமிழகத்தில் என்ன நடக்கிறது ஒரு பக்கம் அணு உலைக்கு எதிராக போராட்டம் இப்ப என்னான அமெரிக்காவுக்கு எதிரா போராட்டம் அதிலும் அணு உலைக்கு எதிரா முஸ்லீம்கள் எல்லாம் போராடுகிறார்கள் அறிக்கை கொடு என தமிழகத்தின் குருநிலத்தை ஆட்சி செய்யும் அல்லிராணியிடம் டெல்லி பேரரசு
போராட்டம் என்ற ஒற்றை சொல்லை தனது ஆட்சிகாலத்தில் எங்கும் கேட்க கூடாது வெந்ததை தின்று விதி வந்தால் சாகவேண்டும் தனது குரு நில அரசில் போராட்டமா..? அதுவும் தனது அரசின் தலைநகரிலா தன்னை கோபித்து கொள்ளாதா? டெல்லி பேரரசு தனது ஏவல் படையை அணுப்பி அமெரிக்காவின் அடாவடி செயலை கண்டித்து திரண்ட இசுலாமியர்களின் மண்டையை பதம் பார்திருக்கிறது அல்லி ராணியின் ஆடாவடி படை
தமிழகத்தில் முன் எப்போழுதும் இல்லாத அளவிற்கு தமிழக இசுலாமிய மக்கள் பொது கோரிக்கையின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் கடந்த ஆறுமாத காலமாக தமிழக சிறைகளில் வாடி வரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் செப்.15 அண்ணா பிறந்த தினத்தில் விடுதலை செய்ய கோரி பொது சமுகத்தோடு இனைந்து போராடினார்கள் ஆனால் இந்த அரசுக்கு எம் மக்களின் கோரிக்கை சிறு அளவுகூட எட்டவில்லை அவர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி இன்று வரை அரசு அதற்கு எவ்வித பதிலும் கூறாதநிலைதான் இருந்து வருகிறது.
அடுத்து கூடங்குளம் அணு உலைக்கு எதிராகவும் அணு உலைக்கு எதிராக போராடும் இடிந்த கரை மக்களின் மீதான அரசவண்முறையை எதிர்த்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் இசுலாமிய அமைப்புகள் முன்னேடுத்து பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரை மக்களின் தனி போராட்டம் அல்ல அது ஒட்டுமொத்த மக்களின் போராட்டம் என்ற உணர்வில் இசுலாமிய மக்களும் அதன் இயக்கங்களும் முன்னேடுத்து செல்ல இந்திய தமிழக அரசுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய வேலையில் திடீர் என்று தமிழக கியூ பிரிவால் திருச்சியில் முஸ்லீம் பயங்கரவாதி ! கைது செய்யப்பட்டார் இந்தியாவில், தமிழகத்தில் ஆட்சியாளர்களுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டால் உடனே தீவிரவாதிகள் கைது செய்யப்படுவார்கள். அதை ஊடகங்களும் தங்களின் கற்பனை கதைகளை கலந்து விதவிதமாக செய்திகள் போட்டு தங்கள் பங்கிற்கு பிரச்சனையை திசை திருப்பும் வேலையை நன்கு செய்யும். ஆட்சியாளர்களே உங்கள் அரசுகளை காப்பாற்றிக்கொள்ள பலியாடுகள் முஸ்லீம்கள்தானா என்ற கேள்வியை ஒவ்வொரு இசுலாமியன் மனதிலும் நெருடிக்கொண்டிருக்கும் விடயமாகும்.
கூடங்குளம் போராட்டத்தை நசுக்க முற்படும் அரச பயங்கரவாதம் இன்று தமிழக இசுலாமிய மக்களுக்கு எதிராக லத்தியை திருப்பி இருக்கிறது பல்லாயிரகணக்கான மக்கள் கூடிய ஆர்பாட்டத்தில் கொடுரமாக தடியடி நடத்தி பல இசுலாமியர்களின் மண்டையை பிளந்து பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்கள் தடியடியில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுரங்கபாதையில் சென்ற மக்களை சுரங்கபாதையில் வைத்து அடித்து இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை தமிழக காவல்துறை நடத்திக்காட்டியது.
தமிழக அரசே…!
காவல்துறையே…!
போராடும் இசுலாமியர்களை தடிகொண்டு அடக்கநினைக்காதே..
மக்களின் மேல் விழும் ஒவ்வொரு அடியும் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உங்கள் ஆராஜக ஆட்சியின் இருதிகாலத்தை நோக்கி என்பதை புரிந்துகொள்வீர்கள்.